உள்ளூர் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் அருகே விபத்துக்கு காரணமான சிறுவன் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம், அயோத்தியாபட்டணம் அருகே சேலம்- உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதனை பார்த்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் காரை துரத்தினர்.
மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார், குமரகிரி மலை எதிரில் உள்ள அம்மாப்பேட்டை ஏரி சாலையில் புகுந்தது.
இதையடுத்து அம்மாப்பேட்டையிலிருந்து ஏரி சாலை வழியாக சென்ற போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு வந்த காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது காரின் முன்புற வலது சக்கரத்தின் டயர் கழன்று, வாகனத்தை அப்படியே இயக்கி வந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த காரை ஓட்டி வந்த பிரித்திவிராஜ் (வயது 25) என்பவரும், காரில் இருந்த 16 வயது சிறுவனையும் பிடித்து விசாரணை நடத்தியபோது இருவரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. 11- ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவன் மது போதையில் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் சிறுவன் தனது தந்தை காரை எடுத்துக் கொண்டு வந்ததோடு, தனது நண்பரான பிருத்திவிராஜை அழைத்துக்கொண்டு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் காரை பிரித்திவிராஜ் ஓட்ட, சிறுவன் அருகே அமர்ந்திருந்தார். அதிவேகமாக ஓட்டி வந்த போது தான் விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் மோதியதில் படுகாயம் அடைந்த ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.