உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

பணகுடி அருகே கோவில் நிர்வாகி கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்- உறவினர்கள் கலெக்டரிடம் மனு

Published On 2022-05-17 09:44 GMT   |   Update On 2022-05-17 09:44 GMT
பணகுடி அருகே கோவில் நிர்வாகி கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் ராஜபாண்டி யன். இவர் வடக்கன் குளத்தில் உள்ள ஒரு கோவிலில் நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றபோது ஏற்பட்ட தகராறில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டார். 


அப்போது ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக பணகுடி போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திர பூபதி என்ற சம்பத் மற்றும் ராஜகுமாரன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இதற்கிடையே கொலை செய்யப்பட்ட வெங்கடேஷ் ராஜ பாண்டியனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது .  

இந்த கொலை வழக்கு பதிவு செய்து நான்கு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்ய வில்லை என்று கூறி அவரது உறவினர்கள் இன்று 4-வது நாளாக உடலை வாங்க மறுத்து விட்டனர்.

இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு கொலை செய்யப்பட்டவரின் மனைவி சரஸ்வதி, மகன் தனுஷ் ராஜா மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

 வெங்கடேஷ் ராஜ பாண்டியன் கொலை வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு பேரையும் இதுவரை கைது செய்யவில்லை. 

இது தொடர்பாக போலீசாரிடம் தெரிவித்தால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள். கொலை செய்தவர்கள் பணபலம் படைத்தவர்கள் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். 

மேலும் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

அப்போது கொலை செய்யப்பட்ட வெங்கடேஷ் ராஜ பாண்டியனின் மனைவி சரஸ்வதி மயங்கி விழுந்தார். உடனே அவரை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
Tags:    

Similar News