உள்ளூர் செய்திகள்
கோவையில் வெளிநாடு செல்ல விசா கிடைக்காததால் வாலிபர் தற்கொலை
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஒண்டிப்புதூர் நாகையன் தோட்டத்தை சேர்ந்தவர் கிஷோர்குமார் (வயது 27). இவரது மனைவி இந்து (26). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு மகள் உள்ளார்.
கிஷோர்குமார் திருமணத்திற்கு முன்பு ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா தொற்று பரவல் காலத்தில் அவர் இந்தியா திரும்பினார். பின்னர் ஜப்பான் செல்ல வில்லை.
கோவை ஒண்டிபுதூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனால் கிஷோர்குமார் மீண்டும் ஜப்பானுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார். ஆனால் அங்கு செல்ல அவருக்கு விசா கிடைக்கவில்லை.
இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் இரவு வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.