உள்ளூர் செய்திகள்
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
நேற்று இரவு 8.30-மணி அளவில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் விழா நடந்தது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த 5- ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. கடந்த 9 ந்தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63-நாயன்மார்களுக்கு காட்சி அளித்தல் நிகழ்ச்சியும், 12, 13 தேதிகளில் பெரிய தேரும், 14. ந்தேதி சிறிய தேரையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர்.
இதை அடுத்து நேற்று இரவு 8.30-மணி அளவில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் விழா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் ஒளியில் சந்திரசேகர் அம்பாள் சுவாமிகள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முன்னதாக தேவர் சமூக அறக்கட்டளையினர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். தெப்பத்தேர் விழா காண அவினாசி வட்டாரத்தை சேர்ந்த கருவலூர், வெள்ளியம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாசம்பாளையம்.
சேவூர், குரும்பாளையம், பழங்கரை திருமுருகன்பூண்டி, திருப்பூர் உள்ளட்ட பகுதிகளை சேர்ந்க குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தெப்பக்குள படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து தெப்பத்தேர்விழாவை கண்டுகளித்தனர். இன்று 17- ந்தேதி நடராஜர் தரிசனம் நடக்கிறது.
18-ந்தேதி மஞ்சள் நீர் விழா நடைபெற உள்ளது. தெப்ப திருவிழாவை முன்னிட்டு அவினாசி கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.