உள்ளூர் செய்திகள்
சூறாவளி காற்றில் வெற்றிலை தோட்டம் நாசம்: மனவிரக்தியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சூறாவளி காற்றில் வெற்றிலை தோட்டம் நாசம் ஆனதால் மனவிரக்தியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டா ரெட்டிஅள்ளி அருகே கோம்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). இவருக்கு மனைவி விஜயா மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் பெருமாளுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் வெற்றிலை பயிரிட்டு இருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் வெற்றிலை தோட்டம் முழுவதும் வெற்றிலை கொடிக்கு நடப்பட்டிருந்த மரங்கள் அனைத்தும் சாய்ந்து வீணாகி பயன்படாமல் சேதமானது.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த பெருமாள் மீண்டும் வெற்றிலை தோட்டம் அமைக்க வேண்டும் என்றால் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என கவலையுடன் பேசி வந்துள்ளார். மேலும் மனவிரக்தியில் பெருமாள் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நல்லம்பள்ளிக்கு அவரது வீட்டில் மதுவுடன் சேர்ந்து பூச்சி மருந்தையும் கலந்து குடித்தார். இதில் உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.