உள்ளூர் செய்திகள்
மழை

குமரியில் மழை நீடிப்பு- திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

Published On 2022-05-15 04:47 GMT   |   Update On 2022-05-15 04:47 GMT
இரணியல், குளச்சல், கன்னிமார், பூதப்பாண்டி, மயிலாடி, கொட்டாரம், ஆணைக்கிடங்கு, குருந்தன்கோடு பகுதிகளிலும் மழை பெய்தது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவி வருகிறது. நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. நாகர்கோவில் பகுதியில் நேற்றிரவு கனமழை கொட்டியது. இன்று காலையிலும் சாரல் மழை பெய்து வருகிறது.

இரணியல், குளச்சல், கன்னிமார், பூதப்பாண்டி, மயிலாடி, கொட்டாரம், ஆணைக்கிடங்கு, குருந்தன்கோடு பகுதிகளிலும் மழை பெய்தது. கன்னியாகுமரியில் சூரியோதத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்கு காலை மழை பெய்ததையடுத்து சூரியோதத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இன்று காலையில் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது மழையும் விட்டு விட்டு பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவி வருகிறது. திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

சிற்றாறு 2 ல் அதிக பட்சமாக 64 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.98 அடியை எட்டியது. அணை நீர்மட்டம் 42 அடியை எட்டியதும் குழித்துறை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகள்முன் எச்சரிக்கை அறிவிப்பை விடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.10 அடியாக உள்ளது. அணைக்கு 230 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.57 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 18 அடியாகவும், சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 9.97 அடியாகவும், சிற்றார்2 அணையின் நீர்மட்டம் 10.7 அடியாகவும் உள்ளது.

மாவட்டத்தின் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

பேச்சிப்பாறை62.2, பெருஞ்சாணி26.6, சிற்றாறு11.2, சிற்றாறு264, மாம்பழத்துறையாறு24, புத்தன் அணை25.8, நாகர்கோவில்12.4, இரணியல்11.2, குளச்சல் 14.6, சுருளோடு39.4, கன்னிமார்4.8, பூதப்பாண்டி16.6, மயி லாடி4.6, கொட்டாரம்2.4, நிலப்பாறை2, பாலமோர்60.6, அடையாமடை11, ஆணைக்கிடங்கு23.2, திற்பரப்பு55.4, குருந்தன்கோடு25.2, ஆரல்வாய்மொழி8, கோழிப்போர்விளை22, முள்ளாங்கினாவிளை 28.2.

Tags:    

Similar News