உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

44வது செஸ் ஒலிம்பியாட்: தமிழக அரசு இடையே ஒப்பந்தம்- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

Published On 2022-05-14 09:33 GMT   |   Update On 2022-05-14 09:33 GMT
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ் நாட்டில் 44வது செஸ் ஒலிம்பியாட்2022 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ் நாட்டில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பினரிடையே கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியில் பங்கேற்கவுள்ள சதுரங்க வீரர் மற்றும் வீராங்கனைகள் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஆனந்தகுமார், சதுரங்கப் போட்டிக்கான சிறப்பு அலுவலர் தாரேஸ் அஹமத், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், செயலாளர் பரத் சிங் சவுகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News