உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்காவில் தூய்மைப்பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தூய்மைப்பணி-அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

Published On 2022-05-14 09:31 GMT   |   Update On 2022-05-14 09:31 GMT
திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தூய்மைப்பணி நடைபெற்றது. அதனை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:

பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி 2-வது சனிக்கிழமையான இன்று தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜிபூங்கா, எம்.ஜி.ஆர். பூங்கா, கடற்கரை பூங்காவில் தூய்மை பணிகள் நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தூத்துக்குடியில்  தூய்மை பணி தொடங்கி உள்ளது. இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 400 பேருடன், கல்லூரிகளை சேர்ந்த என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவனத்தினரும் ஈடுபட்டுள்ளனர். 

மாநகராட்சி பகுதியை தூய்மையாக வைத்து கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து மாநகர பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள் என அனைத்து பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக வாங்கப்பட்டுள்ள 4 வாகனங்களையும் அமைச்சர் கீதாஜீவன்  இயக்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, என்ஜினீயர் ரூபன்சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், பிரின்ஸ், தி.மு.க. மாநகர செயலாளர்ஆனந்தசேகரன், தாசில்தார் செல்வகுமார், பகுதி செயலாளர் சுரேஷ் குமார், ரவீந்திரன், கவுன்சிலர் கந்தன், பொன்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News