உள்ளூர் செய்திகள்
தீ விபத்து

வல்லன்குமாரன்விளையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

Published On 2022-05-14 05:12 GMT   |   Update On 2022-05-14 05:12 GMT
பிளாஸ்டிக் குடோனில் மின்கசிவு காரணமாக தீ பிடித்தா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் வல்லன்குமரன்விளை பகுதியில் பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். இங்கு ஏராளமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

பிளாஸ்டிக் குடோனில் இருந்து இன்று அதிகாலையில் புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கோபிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி பென்னட் தம்பி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது பிளாஸ்டிக் குடோனில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதையடுத்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது.தீ விபத்து காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்களும் அச்சம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்களின் முயற்சியின் காரணமாக தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பிளாஸ்டிக் குடோனில் மின்கசிவு காரணமாக தீ பிடித்தா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News