உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

டவுனில் அனுமதி பெறாத 38 சாலையோர கடைகளுக்கு மாநகராட்சி ‘கெடு’-கமிஷனர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுமூகதீர்வு

Published On 2022-05-13 10:00 GMT   |   Update On 2022-05-13 10:00 GMT
டவுனில் வியாபாரிகள் போராட்டம் நடைபெற்றதையொட்டி மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நெல்லை:

நெல்லை டவுனில் 4 ரதவீதிகளிலும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கீழரதவீதி, வடக்கு ரதவீதியில் அதிகமான சாலையோர கடைகளும்  உள்ளது. இவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருகிறது.

நேற்று அதேபோல் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நிரந்தரகடைக்காரர்கள் திடீரென கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபாதை வியாபாரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் தலைமையில் இருதரப்பினரிடையே இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் கமிஷனர் விஷ்ணுசந்திரன் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிரந்தரகடைக்காரர்கள் சார்பில் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த தவசி தலைமையிலும், நடைபாதை வியாபாரிகள் சார்பில் மாரியப்பன் தலைமையிலும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ரதவீதிகளில் 72 நடைபாதை வியாபாரிகள் அனுமதி சான்று பெற்றுள்ளனர். ஆனால் தற்போது 110 கடைகள் செயல்பட்டு வருகிறது. எனவே அனுமதி பெறாத 38 சாலையோர கடைகளை வருகிற 16-ந் தேதிக்குள் அங்கிருந்து அகற்ற வேண்டும். மேலும் 72 கடைக்காரர்கள் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடஅளவை தாண்டி கூடுதலான இடத்தில் கடைகள் அமைத்துள்ளனர்.

 எனவே மாநகராட்சி சார்பில் இன்று முதல் அவர்களுக்கான இடஅளவை அளவீடு செய்து மார்க் செய்யப்படும். அனுமதிபெற்ற 72 கடைக்காரர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாநகராட்சி சார்பில் 4 மாதத்திற்குள்   கடைகள் அமைத்து கொடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 அந்த கெடு ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு உகந்த 2 மாற்று இடங்களை தேர்தெடுத்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அங்கு போக்குவரத்து நெருக்கடி உள்ளதா என்பது  உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதனை 2 தரப்பினரும் ஏற்றுக் கொண்டதால் கூட்டத்தில் சுமூகதீர்வு காணப்பட்டது.
Tags:    

Similar News