உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

ரூ.20 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை- ஸ்ரீபெரும்புதூர் பெண்ணிடம் விசாரணை

Published On 2022-05-11 09:22 GMT   |   Update On 2022-05-11 09:22 GMT
மப்பேடு போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பச்சிளம் குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த சத்தரை கிராமம், கொள்ள காலனியைச் சேர்ந்தவர் நம்பிராஜ். இவரது மனைவி சந்திரா(33). இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சந்திராவுக்கு பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5ந் தேதி மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு சந்திரா, தனது தாயுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவரிடம் குழந்தை இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவர் நம்பிராஜ், குழந்தை குறித்து மனைவி சந்திராவிடம் கேட்டார். அப்போது அவர் குழந்தை இறந்து விட்டது, யாரிடமோ கொடுத்து விட்டேன் என மழுப்பலாக பதில் கூறினார்.

இதையடுத்து அருகில் வசிப்போர் மற்றும் உறவினர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் விசாரித்தபோது குழந்தை நலமாக இருந்ததாகவும், தாயுடன் குழந்தையை அனுப்பியதாகவும் அங்கிருந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மப்பேடு போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பச்சிளம் குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் இருந்த குழந்தையை மீட்டு திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக குழந்தையை வாங்கிய பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News