உள்ளூர் செய்திகள்
அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு கணினி மூலம் ரூ.175 கோடி வாடகை வசூல்- அமைச்சர் சேகர்பாபு

Published On 2022-05-11 08:49 GMT   |   Update On 2022-05-11 08:49 GMT
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அசையா சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை, குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடந்த 8.10.2021 அன்று கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. 1.11.2021 அன்று முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அசையா சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை, குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டான 1431, 1.07.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு 30.6.2022 அன்று முடிவடைகிறது.

இந்த பசலியில் துறையின் நடவடிக்கையால் 1.7.2021 முதல் நாளது தேதி வரை ரூ.175 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக, இணை ஆணையர் சென்னை 1 ரூ. 26.68 கோடி, இணை ஆணையர் சென்னை 2 ரூ.21.21 கோடி, இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ.14.58 கோடி, இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 11.75 கோடி, இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ. 10.69 கோடி, இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ. 10.36 கோடி.

இணை ஆணையர் மதுரை ரூ. 9.2 கோடி, இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.8.87 கோடி, இணை ஆணையர் திண்டுக்கல் ரூ8.84 கோடி, இணை ஆணையர் திருநெல்வேலி ரூ. 7.3 கோடி, இணை ஆணையர் வேலூர் ரூ. 6.83 கோடி, இணை ஆணையர் கோயம்புத்தூர் ரூ. 6.08 கோடி, இணை ஆணையர் கடலூர் ரூ. 5.96 கோடி, இணை ஆணையர் சேலம் ரூ. 5.91 கோடி, இணை ஆணையர் தஞ்சாவூர் ரூ. 5.42 கோடி, இணை ஆணையர் ஈரோடு ரூ. 5.14 கோடி, இணை ஆணையர் சிவகங்கை ரூ. 3.08 கோடி, இணை ஆணையர் திருவண்ணாமலை ரூ. 2.81 கோடி, இணை ஆணையர் திருப்பூர் ரூ. 2.57 கோடி, இணை ஆணையர் விழுப்புரம் ரூ. 1.61 கோடி என வசூல் செய்யப்பட்டுள்ளது.

கோவில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.5.4 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.4.11 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ரூ.4.06 கோடியும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ரூ.2.82 கோடியும், பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.2.72 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் ரூ.2.15 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.2.1 கோடியும், திருச்சி, துறையூர், பஞ்சவர்ண சுவாமி கோவிலில் ரூ.1.91 கோடியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.1.91 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவிலில் ரூ.1.61 கோடியும், இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் கோவில்களின் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருக்கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News