உள்ளூர் செய்திகள்
விளையாட்டுப் போட்டிகளில் சாதித்தவர்களை வாழ்த்தி கவுரவித்த விஜய் வசந்த்
குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் விளையாட்டு துறையில் திறன் பெறுவதற்காக எல்லாவித உதவியும் செய்து வருவதாக விஜய் வசந்த் கூறி உள்ளார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் மரியா, சமீபத்தில் நடைபெற்ற சந்தோஷ் டிராபிக்கான மாநிலங்களுக்கிடையேயான தேசிய கால்பந்து போட்டியில் கேரளா அணி சார்பில் விளையாடி கோப்பையை வென்றுள்ளார். அவரை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதுபோன்று ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த நாகர்கோவிலை சேர்ந்த செல்வி பெமில், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து விஜய் வசந்திடம் வாழ்த்து பெற்றார்.
இத்தகவலை வெளியிட்டுள்ள விஜய் வசந்த் எம்.பி., குமரி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் சிறப்பாக விளையாடி பரிசுகள் வென்று வருகிறார்கள் என்று குறிப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் விளையாட்டு துறையில் திறன் பெறுவதற்காக எல்லாவித உதவியும் செய்து வருவதாகவும், அரசாங்க ரீதியாகவும் எனது தனிப்பட்ட முறையிலும் விளையாட்டு வீரர்களுக்கு எல்லாவித வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் விஜய் வசந்த் எம்.பி. உறுதியளித்துள்ளார்.