உள்ளூர் செய்திகள்
கோடை உழவுப்பணியில் விவசாயிகள் ஆர்வம்
வெங்காயம், தக்காளி, நிலக்கடலை, மஞ்சள், மரவள்ளி என பெரும்பாலான பயிர்கள் வைகாசி பட்டத்தில் தான் சாகுபடி செய்யப்படுகின்றன.
திருப்பூர்:
கோடையில் நிலத்தை உழுதால் அடுத்து பெய்யும் மழை நீர் முழுமையாக நிலத்தில் இறங்கும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதும் நீர் வளம் இருக்கும். பூச்சியினங்கள் பல்கிப் பெருகுவது தவிர்க்கப்படும்.
இந்த ஆண்டு கோடை மழை போதுமான அளவு பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் கோடை உழவு பணியை துவக்கியுள்ளனர். விரைவில் வைகாசிப் பட்டம் துவங்க உள்ளது.
வெங்காயம், தக்காளி, நிலக்கடலை, மஞ்சள், மரவள்ளி என பெரும்பாலான பயிர்கள் வைகாசி பட்டத்தில் தான் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு போதுமான விலையும் கிடைக்கும்.வைகாசி பட்ட சாகுபடிக்கு முன் நிலத்தை உழுவதன் மூலம் நிலத்திலுள்ள களைகள் கட்டுப்படுத்தப்படும்.
இதன் மூலம் களைக்கொல்லிகளுக்காக செலவு செய்யும் பணம் மீதமாகும்.நிலத்தை உழுவதன் மூலம் நிலத்தில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மண் பொலபொலப்பு தன்மை அடைவதால் அடுத்த போகம் சாகுபடி செய்யும் பயிர்கள் நன்கு வேர் பிடித்து வளர இது பேருதவியாக இருக்கும். இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும். எனவே, கோடை உழவு விவசாயிகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.