உள்ளூர் செய்திகள்
கோவை குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்தவர்களை படத்தில் காணலாம்

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்- நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்

Published On 2022-05-08 09:20 GMT   |   Update On 2022-05-08 09:20 GMT
கொரோனா காரணமாக மூடப்பட்ட கோவை குற்றலாம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வடவள்ளி:

கோவை மாவட்டம் போளூவாம்பட்டி வனசரகத்தில் கோவை குற்றலாம் என்ற சுற்றுலா தலம் இயங்கி வருகிறது.

இந்த சுற்றுலா தலம் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதாலும், இங்கு குளித்து மகிழ்வதோடு, இங்குள்ள இயற்கை அழகை காண்பதற்காகவும் கோவை மாவட்டம் மட்டுமின்றி சென்னை, திருச்சி, மதுரை உள்பட பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

கொரோனா காரணமாக மூடப்பட்ட கோவை குற்றலாம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இங்கு வரும் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது.

தற்போது சமவெளி பகுதிகளில் கடுமையான கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலால் மக்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர். வெயிலில் இருந்து தப்பிக்கவும், குடும்பத்தோடு விடுமுறையை கழிப்பதற்காகவும் ஏராளமானோர் முன்பதிவு செய்து கொண்டு குடும்பம், குடும்பமாக கோவை குற்றாலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. விடுமுறை தினமான நேற்று மற்றும் இன்றும் கோவை குற்றாலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

அருவியில் பெரியர்கள், சிறியவர்கள் என அனைவரும் உற்சாக மிகுதியுடன் குளித்து மகிழ்ந்தனர். தற்போது அந்த பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அருவியில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு ஆனந்த குளியல் போட்டனர்.

குளித்து முடித்து விட்டு அருகே இருக்கும் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், தாவரங்கள், விலங்குகளை கண்டு ரசித்து தங்கள் பொழுதை கழித்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் ஒலி பெருக்கி மூலம் சுற்றுலா பயணிகள் பத்திரமாக குளிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் முண்டியக்க கூடாது. பொருட்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். விரைவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News