உள்ளூர் செய்திகள்
கிரிப்டோகரன்சி மோசடியில் ரூ.1.5 கோடி பணத்தை இழந்த காவலர்கள்- சென்னை கமிஷனர் சுற்றறிக்கை
சமூக வலைதளங்கள் மூலம் கவர்ந்திழுக்கும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
சென்னை:
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கூறியிருப்பதாவது:
காவல்துறையில் பணியாற்றிய ஒருவர் ஆன்லைன் ரம்மி மூலமாக பணத்தை இழந்த சோகத்தில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என அப்போதே தெரிவித்திருந்தேன்.
இந்த சூழ்நிலையில், புதுவை மோசடியில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் மற்றும் அவர்களை சார்ந்த நபர்கள் என மொத்தம் ரூ.1.5 கோடி வரை கிரிப்டோகரன்சி மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைத்தளம் மூலம் போலியான நிறுவனங்களை நம்பி காவலர்களை பணத்தை இழந்துள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் கவர்ந்திழுக்கும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம். ஆன்லைன் ரம்மி மற்றும் குறுகிய காலத்தில் அதிக பணமீட்டலாம் என்ற அடிப்படையில் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால் அதை நம்பி ஏமாறவேண்டாம். காவலர்கள் தங்களது ஊதியத்தை நியாயமான முறையில் வங்கியில் முதலீடு செய்யுங்கள்.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, அந்தந்த காவல் மாவட்டங்களில் நோடல் ஆபீசர் என்ற அதிகாரியை நியமித்து அனைத்து காவலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
இவ்வாறு காவல் ஆணையர் தனது சுற்றறிக்கையில் கூறி உள்ளார்.