உள்ளூர் செய்திகள்
ரெயில்

46 ரெயில்களில் கூடுதலாக 60 பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரெயில்வே ஏற்பாடு

Published On 2022-05-05 07:02 GMT   |   Update On 2022-05-05 07:02 GMT
கோடை காலம் என்பதால் அனைத்து ரெயில்களும் நிரம்பி உள்ள நிலையில் தேர்வு எழுத செல்பவர்கள் வசதியாக செல்ல தெற்கு ரெயில்வே 46 ரெயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்துள்ளது.
சென்னை:

ரெயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ரெயில்வே வாரியம் வருகிற 8, 9-ந் தேதிகளில் தேர்வு நடத்துகின்றன. இந்த தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இத்தேர்வை லட்சக்கணக்கானவர்கள் எழுத தயாராகி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுத செல்லும் தேர்வர்கள் வசதிக்காக ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கோடை காலம் என்பதால் அனைத்து ரெயில்களும் நிரம்பி உள்ள நிலையில் தேர்வு எழுத செல்பவர்கள் வசதியாக செல்ல தெற்கு ரெயில்வே 46 ரெயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்துள்ளது.

2-ம் படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள், ஏ.சி.சேர்கார் பெட்டிகள் என மொத்தம் 60 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன.

நாகர்கோவில்- தாம்பரம், தாம்பரம்-நாகர்கோவில், சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில், தாம்பரம்- எர்ணாகுளம், கோவை- மங்களூர், ராமேஸ்வரம்- ஒகா, எழும்பூர்- மங்களூர், கோவை- நாகர்கோவில், சென்ட்ரல்- பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

5, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இரண்டாம் படுக்கை வசதி பெட்டிகள் 20-ம், முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் 16-ம் மீதமுள்ள பெட்டிகள் ஏ.சி. சேர்களாகவும் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் ரெயில்வே தேர்வுக்காக கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ரெயில்வே தேர்வு சிறப்பு ரெயில் என்ற பெயரில் 7-ந்தேதி கொச்சுவேலியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு 8-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு வந்து சேருகிறது.

தாம்பரத்தில் இருந்து 10-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 11-ந் தேதி பகல் 12 மணிக்கு கொச்சுவேலி சென்றடைகிறது.

Tags:    

Similar News