உள்ளூர் செய்திகள்
கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்த இரா.காமராஜ் எம்.எல்.ஏ.

அரசு கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது - கலெக்டரிடம், எம்.எல்.ஏ மனு

Published On 2022-05-03 07:22 GMT   |   Update On 2022-05-03 07:22 GMT
குடவாசலில் எம்.ஜி.ஆர். பெயரில் இயங்கும் அரசு கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என திருவாரூர் கலெக்டரிடம் இரா.காமராஜ் எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் எம்ஜிஆர் பெயரில் இயங்கி வரும் அரசு கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் சென்று திருவாரூரில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசலில் 2017 ஆம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. கடந்த ஆட்சியின் போது இக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கும் நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதால் நீதிமன்ற உத்தரவினால் தாமதமாகியது.

இதனால் தற்போது டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் பள்ளி வளாகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி நடப்பதாக தெரிகிறது. 

இது குடவாசல் பகுதியில் சாதாரண மக்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்கு கொடுக்கப்பட்ட கல்லூரி யாகும். 
வலங்கைமான் கும்பகோணம், நன்னிலம், கொரடாச்சேரி, திருவாரூர் ஆகிய பகுதிகளில் மையப் பகுதியாகவும், இவ்வூர்களில் இருந்து மாணவர்கள் வந்து கல்வி கற்க பேருந்து வசதியும் உள்ளது. 

மேற்கண்ட பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த இக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டால் தற்பொழுது பயின்றுவரும் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இக்கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி பல அரசியல் கட்சிகளும், பொதுநல சங்கங்களும் தொடர்ந்து அறப் போராட்டங்களின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். இக்கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்பது இப்பகுதி மக்களின் விருப்பமாகவும் கோரிக்கை யாகவும் இருக்கிறது. எனவே இக் கல்லூரியை இடமாற்றம் செய்யாமல் குடவாசல் பகுதியிலேயே தொடர்ந்து செயல்பட ஆவன செய்யுமாறு அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனுவில் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் மற்றும் குடவாசல், வலங்கைமான், நன்னிலம் ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் இந்த மனுவை தமிழக முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதல்வரின் தனி செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கும் இமெயில் மூலம் அனுப்பியுள்ளனர். 

இந்த நிகழ்வில் ஒன்றியக்குழுத் தலைவர்கள் வலங்கைமான் சங்கர், குடவாசல் கிளாரா செந்தில், நன்னிலம் விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags:    

Similar News