உள்ளூர் செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

செல்போன் மூலம் குழந்தைகள் மனதை கெடுத்துக் கொண்டது கொரோனாவை விட கொடியது- உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

Published On 2022-04-30 21:12 GMT   |   Update On 2022-04-30 21:12 GMT
மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில், சிறுமி கர்ப்பமடைந்தாள். இந்த வழக்கில் சிறுவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்த திருவள்ளூர் சிறார் நீதி குழுமம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் குழந்தைகள் மூழ்கியதுடன் பெற்றோருடன் அவர்களது நெருக்கம் குறைந்ததாக நீதிபதி தெரிவித்தார். இதனால் குழந்தைகள் மனதை கெடுத்துக் கொண்டதாகவும், இது  கொரோனாவை விட கொடிய தொற்று என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார். 

இதன் மூலம் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் காவல் துறையினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் பதிவு ஆறுதலளிக்கும் வகையில் உள்ளது என நீதிபதி குறிப்பிட்டார். 

மேலும் பள்ளிக்கல்வித்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சம்பவம் நடந்தபோது மைனர் என சிறார் நீதிவாரியத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும், சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப் பட்டுள்ளதால் தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Tags:    

Similar News