உள்ளூர் செய்திகள்
குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதி
பேராவூரணி காட்டாற்று பாலத்தில் குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பேராவூரணி-
பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் குறுகலான பூனைகுத்தி காட்டாறு உள்ளது. இந்த பழமையான காட்டாற்று பாலத்தில் மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது வழக்கமாக உள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் மழை பெய்யும் சமயங்களில் இந்த காட்டாற்று பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் செல்வவிநாயகபுரம், ஆண்டவன் கோயில், இந்திரா நகர், தென்னங்குடி, கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேராவூரணி வர இயலாமல் தவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டில் தொடர்ந்து அதிக கன மழை பெய்து வந்ததால் காட்டாறு பாலத்தில் உள்ள சாலையில் ஆங்காங்கே கப்பிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் பேருந்து, லாரிகள் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் செல்வோறும் குண்டும் குழியுமான சாலையில் தடுமாறி விழும் சூழல் உள்ளது.
இந்த சாலை வழியாக பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சைக்கிளில் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.
மேலும் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க உடனடியாக புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.