மாதவரம் அருகே குளத்தில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவன் பலி
கொளத்தூர்:
மணலி எம்.எம்.டி.ஏ, முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் ராமு. எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மகன் எழிலரசன் (வயது10). அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றுமாலை எழிலரசன் சக மாணவர்களுடன் மாத்தூர் அருகே பாலசுப்ர மணியம் நகரில் உள்ள குளத்தில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற எழிலரசன் தண்ணீரில் மூழ்கினார்.
இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் விரைந்து வந்து எழில ரசனின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்க பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குளத்தில் எழிலரசனை தேடும்பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் மாணவன் எழிலரசனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை எழிலரசன் உடல் பிணமாக குளத்தில் மிதந்தது. மாதவரம் பால் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.