உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
தமிழகம் முழுவதும் வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
இதனால் மாநிலம் முழுவதும் சரணாலயம், தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மேய்ச்சலுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.
இதனால் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கால்நடை மேய்ச்சலுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை யடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாயகிருஷ்ணன், பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சி, முகம்மது அலி, பண்டாரம், பால்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.