உள்ளூர் செய்திகள்
சென்னையில் கஞ்சாவுடன் கல்லூரி மாணவர் 2 பேர் சிக்கினர்- விற்பனை செய்த 3 பேர் கைது
ஜாம்பஜாரில் கஞ்சா வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தேனாம்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது ஒருவர் பெயர் முகமது உசேன் (20), மற்றொருவர் பெயர் ஜெயந்திரர் (21) கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்தது. இருவரும் மண்ணடியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் 200 கிராம் கஞ்சா இருந்துள்ளது.
இதையடுத்து நடத்திய விசாரணையில் போன் செய்தால் கஞ்சா கொண்டு வந்து தருவதாக கூறினர். கஞ்சா வியாபாரிக்கு மாணவர்களை போன் செய்யக் கூறியதை தொடர்ந்து சிறிது நேரத்தில் ஹரி (33) என்பவர் கஞ்சா பொட்டலம் கொண்டு வந்துள்ளார். கொடுங்கையூர் அமுதம் நகரைச் சேர்ந்த அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ஜாம்பஜாரில் கஞ்சா வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்றது தெரிய வந்தது.