உள்ளூர் செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம், மாமல்லபுரம் நினைவு சின்னம்

மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்காத அதிகாரியை தண்டிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

Published On 2022-04-19 22:46 GMT   |   Update On 2022-04-19 22:46 GMT
உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சென்னை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவை பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பை பிரிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் கூறப்படும் இடத்தில் குப்பைக் கிடங்கு செயல்படவில்லை எனக் கூறி, புகைப்பட ஆதாரங்களுடன் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். 

ஆனால், முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது. இதற்கு காரணமான அதிகாரியை தண்டிக்க வேண்டும். மாமல்லபுரம் செல்லும்போது பேரூராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  குப்பைக் கிடங்குக்குள் பொதுமக்கள் நுழைவதற்காகவா இந்தக் கட்டணம் என்றும் கேள்வி எழுப்பினர். 

பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News