உள்ளூர் செய்திகள்
ரெயிலில் அடிபட்டு ஆட்டோ டிரைவர் பலி
பாபநாசத்தில் அருகே ரெயிலில் அடிபட்டு ஆட்டோ டிரைவர் பலியானார்.
பாபநாசம்:
பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சி மாலாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் விஜயன் (வயது 32) ஆட்டோ டிரைவர். திருமணமாகாதவர். இவர் பாபநாசம் ரெயில்வே நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது நாகர்கோவிலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேலு, சப் &இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விஜயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாபநாசம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் இயங்கவில்லை. விஜயனுக்கு மலர் அஞ்சலி செலுத்தி அனைத்து ஆட்டோ டிரைவர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.