திருவள்ளூரில் மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பூண்டி ஏரியில் நாராயணபுரம் பகுதியில் கரை பலப்படுத்த தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் செல்கின்றன.
அதில் பாதிக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் மணல் மீது தார்பாய்களை மூடாமல், வேறு எந்த பாதுகாப்பு வசதிகளும் செய்யாமல் அசுரவேகத்தில் செல்கின்றன. இதனால் சாலையில் செல்லும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும் லாரியில் இருந்து பறந்து வரும் மணல் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதால் தொடர்ந்து வாகனத்தை ஓட்ட முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனால் சில நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் கலெக்டர் அலுவலகம், போக்குவரத்து அலுவலகம் , காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் வழியே செல்கின்றன.
மேலும் வழக்கமாக சாலையின் முக்கிய வீதிகளில் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தும் போலீசாரும், வாகன சோதனையில் ஈடுபடும் மோட்டார் வாகன ஆய்வாளர்களும் இந்த மணல் லாரிகளை கண்டு கொள்வதில்லை.
எனவே, திருவள்ளூர் வழியாக செல்லும் அனைத்துத் மண்லாரிகளும் தார்பாய் போட்டு மூடி பின்னால் செல்லும் வாகன
ஓட்டிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும்கோரிக்கை விடுத்து உள்ளனர்.