உள்ளூர் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்:
தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியிடங்களில் பணி அமர்த்தி கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். குறைந்த பட்சம் ஓய்வூதியம் பணிக்கொடை வழங்கிட வேண்டும் எனவும், இதனை தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக அளித்தநிலையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் சமூக நல மானிய கோரிக்கையை அறிவிக்க வலியுறுத்தியும், காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சாத்தான்குளம் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டாரத் தலைவர் விஜயராணி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சார்லஸ் முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் செந்தூர்ராஜன், வட்டார செயலர் இஸ்மாயில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட இணை செயலர் முருகன், வட்டார செயலர் அந்தோணி தமிழ்செல்வன் ஆகியோர் கோரிகையை வலியுறுத்தி பேசினர்.
இதில் சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் அற்புதராஜ் நன்றி கூறினார்.