உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

முத்துப்பேட்டையில் மின்சாரம் தாக்கி விடுதலை சிறுத்தை நிர்வாகி பலி

Published On 2022-04-14 05:20 GMT   |   Update On 2022-04-14 05:20 GMT
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இன்று காலை மின்சாரம் தாக்கியதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் துறைத்தோப்பு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்கான பிளக்ஸ் போர்டு வைக்கும் பணியில் இளம் சிறுத்தை பாசறையின் ஒன்றிய துணைச்செயலாளராக உள்ள தில்லைவிளாகம் இந்திரா நகரை சேர்ந்த சின்னத்துரை (வயது 32) மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக பிளக்ஸ் போர்டை மேலே நிமிர்த்தியபோது மின் கம்பியில் உரசியது. இதில் சின்னத்துரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரை காப்பாற்ற முயன்ற நிர்வாகிகள் கார்த்திகேயன்(25), சபரிநாதன்(26), புண்ணியமூர்த்தி (20), மனோஜ்(19) ஆகிய 4 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் பலியான சின்னத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சின்னத்துரைக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு தான் கமலி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது கமலி கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது. இச்சம்பவம் கிராம மக்களிடமும், கட்சியினரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News