உள்ளூர் செய்திகள்
மருத்துவ படிப்பு

தமிழகத்தில் 111 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன

Published On 2022-04-04 06:28 GMT   |   Update On 2022-04-04 06:28 GMT
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் 15 இடங்களும், சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 5 இடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

கலந்தாய்வு மூலம் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர்.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளும், 15 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளில் 4,349 இடங்களிலும் தனியார் கல்லூரிகளில் 2,650 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி முதல் இதற்கான கலந்தாய்வு தொடங்கி மாணவ-மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு முதல் நாள் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதே போன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட 436 இடங்களுக்கும் மருத்துவ படிப்புக்காக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு இன்னும் 111 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 85 எம்.பி.பி.எஸ். இடங்களும், 36 பல் மருத்துவ படிப்புக்கான இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளதாக தேர்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 111 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடுக்கான இடங்களாகும்.

சென்னை மற்றும் மதுரையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக உள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் 15 இடங்களும், சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 5 இடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆகியவற்றிலும் தலா ஒரு இடங்கள் காலியாகவே உள்ளன. இந்த தகவல மாநில தேர்வு குழு செயலாளர் டாக்டர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News