உள்ளூர் செய்திகள்
பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பெரியகுளம் நகர்மன்ற முதல் கூட்டம்

Published On 2022-03-30 06:39 GMT   |   Update On 2022-03-30 06:39 GMT
பெரியகுளம் நகர்மன்ற முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
பெரியகுளம்:

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி-.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். சில நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால் சில இடங்களில் தி.மு.க.வினர் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.

ஆனால் அதன் பின்னரும் சில இடங்களில் கவுன்சிலர்கள் பேரூராட்சி, நகராட்சி தலைவர், துணைதலைவர் பதவிகளை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர்.

பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி வி.சி.க. விற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க.வை சேர்ந்த ராஜாமுகமது மறைமுக தேர்தலில் நின்று துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று நகர்மன்ற கூட்டம் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது வி.சி.க. கவுன்சிலர் பிரேம்குமார், தான் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறி இருக்கையில் அமர்ந்தார்.
ராஜாமுகமது கடைசி இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News