உள்ளூர் செய்திகள்
பழமையான கோவில்களை புனரமைத்து பாதுகாக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமையான கோவில்களை போல கட்ட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மீறும் வகையில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டு அந்த சுவற்றில் வெள்ளையடிக்கப்படுகிறது என தமது மனுவில் அவர் தெரிவித்திருந்தார். நாமக்கல் சோளீஸ்வரர் கோவிலின் பழமையான கற்கள் உடைக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதி கேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் கூறும் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஈரோட்டில் உள்ள கோவில் ஒன்றின் மண்டபம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் அந்தக் கோவிலின் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களை போல அற்புதமான கட்டுமானத்துடனும், சிறந்த தொழில் நுட்பத்துடனும், முறையான ஆகம விதிகளுடன் கட்டமுடியாது என தெரிவித்தனர்.
அதனால் பழமையான கோவில்களை முறையாக புனரமைத்து சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.