உள்ளூர் செய்திகள்
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஊனமுற்றோருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கல்
புளியன்குடி ராமையா அம்மாக்கண்ணு காத்தாயி அம்மன் டிரஸ்ட் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஊனமுற்றோருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
புளியன்குடி ராமையா அம்மாக்கண்ணு காத்தாயி அம்மன் டிரஸ்ட் சார்பில் தஞ்சையை அடுத்த நெல்லிதோப்பு கோவிலூர் பகுதியில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஏழைப் பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த டிரஸ்ட்டின் சேர்மனாக இருந்த மறைந்த நீதிபதி கோகுலகிருஷ்ணன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அவர் மறைந்த பிறகும் இந்த சேவை தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி இன்று புளியன்குடி ராமையா அம்மாக்கண்ணு காத்தாயி அம்மன் டிரஸ்ட் தற்போதைய சேர்மன் ராமசாமி தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
17 மாணவர்களுக்கு தேவையான நிதியுதவி அளிக்கப்பட்டது. இதேபோல் உடல் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் காத்தாயி அம்மன் கோவில் தர்மகர்த்தா காத்தாயி அடிமை ப. சாமிநாதன் முனையதிரியர், பக்தர்கள் கலந்து கொண்டனர்.