உள்ளூர் செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

ஒடிசாவில் இருந்து நிலக்கரி கொண்டு வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2022-03-13 08:42 GMT   |   Update On 2022-03-13 08:42 GMT
ஒடிசாவில் இருந்து அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், 4320 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்களில் அதிகபட்சமாக 2240 மெகா வாட் மட்டுமே உற்பத்தியாகி உள்ளது.

தமிழகத்தின் 5 அனல்மின் நிலையங்களுக்கு தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால், 30 ஆயிரம் டன் மட்டும் தான் நிலக்கரி வருகிறது. ஒடிசாவின் பாரதிப் துறைமுகத்தில் நிலக்கரி குவிந்து கிடக்கும் போதிலும், ஏற்றி வருவதற்கு கப்பல்கள் இல்லாததே பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

நிலக்கரி பற்றாக்குறை நீடித்தால் மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். அது மின்சார வாரியத்தை கடுமையாக பாதிக்கும். இல்லாவிட்டால் கடுமையான மின்வெட்டு ஏற்படும். மக்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது.

கூடுதல் கப்பல்களை ஏற்பாடு செய்து ஒடிசாவில் இருந்து அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அனல்மின் நிலையங்களை முழு அளவில் இயங்கச் செய்து முழு அளவில் மின்உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News