உள்ளூர் செய்திகள்
திமுக

கூட்டணிக்கு ஒதுக்கிய இடத்தில் வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு

Published On 2022-03-05 11:12 GMT   |   Update On 2022-03-05 11:12 GMT
தேனி மாவட்டத்தில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்றவர்கள் யாரும் தங்கள் பதவியை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை.

பெரியகுளம்:

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தலைவர் பதவி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக ரேணுபிரியா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் நகர்மன்ற துணைதலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரேம்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் தி.மு.க.வை சேர்ந்த அப்தல்ரகிம் என்பவர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியகுளம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடி நகர்மன்ற துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி வேட்பாளராக பெருமாள் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த 25வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணவேனி, 28வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கஸ்தூரி ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பெருமாள் வேட்பு மனுவை முன்மொழிய மற்றும் வழிமொழிய எந்த உறுப்பினர்களும் வர வில்லை. இதனையடுத்து அவரது மனு நிராகரிக்கப்பட்டது. கிருஷ்ணவேனி மற்றும் கஸ்தூரி ஆகியோர் போட்டியிட்டதில் துணைத் தலைவராக 17 வாக்குகள் பெற்று தி.மு.க.வை சேர்ந்த கிருஷ்ணவேனி வெற்றி பெற்றார்.

இதனை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போடி அருகில் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் தி.மு.க.வை சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் குணசேகரன், 14வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் ரம்யா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். 3 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நடந்தது.

இதில் தி.மு.க. உறுப்பினர் குணசேகரன் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ரம்யாவிற்கு 5 வாக்குகள் கிடைத்தது. பஞ்சவர்ணத்திற்கு 1 வாக்குகள்கூட கிடைக்கவில்லை. இதனை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் பதவி விலக வேண்டும் என அறிவித்திருந்தார். ஆனால் தேனி மாவட்டத்தில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்றவர்கள் யாரும் தங்கள் பதவியை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் தெரிவிக்கையில், அதிக அளவு பணம் செலவு செய்து வெற்றி பெற்றுள்ளோம்.

ஒரே ஒரு வார்டில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சியினருக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை எப்படி வழங்க முடியும். கட்சி நடவடிக்கை எடுத்தாலும் சில மாதங்கள் கழித்து எங்கள் நிலையை உணர்ந்து கொள்ளும். எனவே பதவியை ராஜினாமா செய்ய முன்வரவில்லை என்றனர்.

Tags:    

Similar News