உள்ளூர் செய்திகள்
கல்வி உதவித்தொகைக்கான திட்டத்தேர்வு - நாளை நடக்கிறது
குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில் ஆசிரியர் ஜோதிமணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உடுமலை:
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,), வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வை 8ம் வகுப்பு மாணவர்கள் எழுதுகின்றனர். இதன் வாயிலாக தகுதி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு, ரூ.12 ஆயிரம் வீதம், பிளஸ்-2 படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது.
இதற்காக உடுமலை கல்வி மாவட்டத்தில் உடுமலையில், பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வுமையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 736 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவும் உள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் தகுதியான மாணவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில் ஆசிரியர் ஜோதிமணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த மாணவர்களுக்கு தேர்வுக்குரிய வழிகாட்டுதல்கள் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.