உள்ளூர் செய்திகள்
உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1 கோடிக்கு காய்கறி விற்பனை
காய்கறிகளின் விலை கடந்த ஜனவரி மாதத்தைவிட பிப்ரவரி மாதம் குறைவாக இருந்ததால் மொத்த விற்பனை தொகை ரூ.41 லட்சத்து 46 ஆயிரத்து 985 குறைவாக இருந்தது.
உடுமலை:
உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி உடுமலை உழவர்சந்தையில் கடந்த மாதம் பிப்ரவரி 1,687 விவசாயிகள் மொத்தம் 5 லட்சத்து 51 ஆயிரத்து 875 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.1 கோடியே 39 லட்சத்து 29ஆயிரத்து 875க்கு விற்பனை ஆனது.
இந்த காய்கறிகளை பொதுமக்கள் 61 ஆயிரத்து 245 பேர் வாங்கி பயனடைந்தனர். கடந்த ஜனவரி மாதத்துடன் கடந்த மாதத்தை பிப்ரவரி ஒப்பிடும்போது உழவர்சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் எண்ணிக்கை 199 பேர் குறைவாக வந்திருந்தனர்.
காய்கறிகள் வரத்து 20 ஆயிரத்து 195 கிலோ குறைவாக இருந்தது. காய்கறிகளின் விலை கடந்த ஜனவரி மாதத்தைவிட பிப்ரவரி மாதம் குறைவாக இருந்ததால் மொத்த விற்பனை தொகை ரூ.41 லட்சத்து 46 ஆயிரத்து 985 குறைவாக இருந்தது.