உள்ளூர் செய்திகள்
வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்ற காட்சி.

சேலம் மாவட்டத்தில் 699 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர்

Published On 2022-03-02 11:21 GMT   |   Update On 2022-03-02 11:21 GMT
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 699 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி 60 கவுன்சிலர்கள், 6 நகராட்சி களில் 165 கவுன்சிலர்கள், 31 பேரூராட்சிகளில் 474 கவுன்சிலர்கள் என 699 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது.

இதில் பேரூராட்சிகளில் 4 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 695 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றவர்கள் விவரம் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது. 

மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 50 வார்டுகளிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதில் சுயேட்சை கவுன்சிலர்கள் 2 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதேபோல், ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர், தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய 6 நகராட்சிகளிலும், 31 பேரூராட்சிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் இன்று (புதன்கிழமை) பதவியேற்றனர்.  சேலம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 60 வார்டு கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் பதவி பிரமானம் செய்து வைத்தார்.  இதற்காக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

நகராட்சிகளில் ஆணையரும், பேரூராட்சிகளில் செயல் அதிகாரிகளும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். அதே நேரத்தில் வருகிற 4-ந் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.
Tags:    

Similar News