சென்னை மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்தி கண்காட்சியை பார்த்து வியந்த பொதுமக்கள்
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 26-ந் தேதி நடந்த குடியரசு தின விழாவில் தமிழக அரசின் சார்பில். சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் உருவச் சிலைகளுடன் கூடிய 3 அலங்கார ஊர்திகள் பங்கேற்றது.
அதன் பின் இந்த அங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு சுற்றுப்பயணமாக கொண்டு செல்லப்பட்டது. தற்போது இந்த அலங்கார ஊர்திகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் கண்காட்சிக்காக அலங்கார ஊர்திகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை வீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.
இந்த அலங்கார ஊர்திகள் இன்று முதல் 23-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படுகின்றன. வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி. பாரதியார் உள்ளிட்ட சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களின் அலங்கார ஊர்தி, பெரியார் அலங்கார ஊர்தி ஆகிய 3 ஊர்திகளை கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பார்வையிடலாம்.