உள்ளூர் செய்திகள்
போலியோ சொட்டு மருந்து முகாம் - வருகிற 27ந்தேதி நடக்கிறது
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மறவாமல் சொட்டு மருந்து அளிக்க முன்வர வேண்டும்.
உடுமலை:
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் தசைநார் பலவீனம் அடைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இந்த நோய் ஏற்படுவதை தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.
அதன்படி வருகிற 27-ந்தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், 2.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 13 ஒன்றியங்களில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் என 1,154 மையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு மையங்களிலும் 4 பணியாளர்கள் வீதம் 4,780 பணியாளர்கள், நியமிக்கப்படவுள்ளனர். தவிர 26 நடமாடும் குழுக்கள், 23 போக்குவரத்து முகாம்களில் சொட்டு மருந்து வழங்கவும் உள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்;
‘அன்றைய தினம் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடக்கும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மறவாமல் சொட்டு மருந்து போட வேண்டும் என்றனர்.