உள்ளூர் செய்திகள்
கனிமொழியை பாராட்டியதால் பறிபோன நவநீதகிருஷ்ணன் பதவி: அ.தி.மு.க. தலைமை அதிரடி..!
மாநிலங்களவை எம்.பி.யான நவநீதகிருஷ்ணன் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீத கிருஷ்ணன் எம்.பி. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளனர்.
டி.கே.எஸ். இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட நவநீதி கிருஷ்ணன், மாநிலங்களவைக்குப் புதிதாக சென்றபோது பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தேன். அப்போது டி.கே.ரங்கராஜன், கனிமொழி ஆகியோா் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தனா்.
ஒருமுறை மத்திய அமைச்சருடன் எனது அனுபவமின்மை காரணமாக சண்டை போட வேண்டியிருந்தது. அப்போது சகோதரி கனிமொழி என்னை சமாதானப்படுத்தி அவரே மத்திய அமைச்சருடன் பேசினாா். நாங்கள் எடுத்துக் கூறிய விஷயம் தமிழகத்தைப் பொருத்தவரை பாதிக்கக் கூடிய விஷயம் எனவும் அமைச்சருக்குத் தெரிவித்தாா்.
மேலும், எனக்கும் ஒரு அறிவுரை கொடுத்து, நம்மூா் மாதிரி பேசக்கூடாது என்றும், எரிச்சலூட்டாமல் அழுத்தம் தர வேண்டுமெனவும் அறிவுறுத்தினாா். ஒரு போராட்டத்தின்போது தேவையில்லாமல் சிக்கலில் மாட்டி விடக்கூடாது என எனக்கு புரிய வைத்தாா் என கனிமொழியை பாராட்டிப் பேசினாா்.
இந்த நிலையில், அதிமுக தலைமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.