உள்ளூர் செய்திகள்
தாழக்குடி அருகே பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
நாகர்கோவில்:
தாழக்குடி அருகே வீராநாரயணமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் குமார். இவரது வீடு சில நாட்களாக பூட்டி கிடந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு ஹரிஷ் குமார் பிணமாக கிடந்தார். அவரது தலையில் காயமும் காணப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஹரிஷ் குமாரின் மனைவியும் குழந்தையும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டது தெரியவந்தது, ஹரிஷ் குமார் தினமும் குடித்துவிட்டு வந்ததால் அவரது தாயாரும் வீட்டை விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனால் மனம் உடைந்த ஹரிஷ் குமார் குடிபோதையில் வீட்டில் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.