உள்ளூர் செய்திகள்
பி.ஆர்.பாண்டியனுக்கு கொலை மிரட்டல்
பி.ஆர்.பாண்டியனுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மனு அளித்துள்ளனர்.
மெலட்டூர்:
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனியப்பன், தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தமிழக விவசாயிகள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மேகதாது அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி தமிழக விவசாயிகள் சார்பில் எதிர்ப்பை தெரிவித்தோம்.
தற்போது வாட்ஸ்அப், இணைய தளத்தில் சிலர் பி.ஆர்.பாண்டியன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தரக்குறைவாகவும், மிரட்டல் விடுத்தும் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எனவே போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீடியோவை பதிய விட்ட நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநகர தலைவர் அறிவு உடன் இருந்தார்.