உள்ளூர் செய்திகள்
ரேசன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

பாவூர்சத்திரத்தில் ரேசன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2022-01-25 09:38 GMT   |   Update On 2022-01-25 09:38 GMT
பாவூர்சத்திரம் அரசு தினசரி சந்தை செல்லும் வழியில் உள்ள ரேசன் கடை அறிவிப்பு பலகையில் எடை எந்திரம் பழுதாகி உள்ளது என்று எழுதிவிட்டு ஊழியர் அடிக்கடி வெளியில் சென்று விடுவதாக கூறி பொதுமக்கள் இன்று கடையை முற்றுகையிட்டனர்.
வீ. கே. புதூர்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அரசு தினசரி சந்தை செல்லும் வழியில் ரேசன் கடை ஒன்று உள்ளது.  

இந்த கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில் உணவு பொருட்கள் வழங்காமல் அங்கு பணிபுரியும் அலுவலர் சரியான நேரத்திற்கு பணிக்கு வராமலும் பொதுமக்களை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.  

அத்துடன் தினமும் கடை வாசலில் உள்ள அறிவிப்பு பலகையில் எடை எந்திரம் பழுதாகி உள்ளது என்று எழுதி வைத்துவிட்டு அந்த ஊழியர் அடிக்கடி  வெளியில் சென்று விடுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த ரேஷன் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கல்லூரணி பஞ்சாயத்து தலைவரிடம் பொதுமக்கள் ரேஷன் கடை நிலைமையை கூறினார். 

பின்னர் அவர் குடிமை பொருள் வழங்கல் தாசில்தாரிடம் பேசி முடிவு எடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News