உள்ளூர் செய்திகள்
மதுரை கோவில்களில் பக்தர்கள் திரண்டு தரிசனம்
3 நாள் தடைக்கு பிறகு மதுரை கோவில்களில் பக்தர்கள் இன்று திரண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் வாரத்தில் 3 நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 2 வாரங் களாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும் கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் வேதனையில் இருந்தனர்.
3 நாட்கள் தடைக்கு பிறகு இன்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. காலையிலேயே பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு வந்து இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சித்திரை வீதியில் குடும்பம், குடும்பமாக பக்தர்கள் திரண்டனர்.
இதேபோல் மதுரையில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், ரிங்ரோடு பாண்டிகோவில், கூடலழகர் பெருமாள் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்களின் கூட்டம் கணிசமாக இருந்தது.