உள்ளூர் செய்திகள்
அபராதம்

திருவள்ளூரில் ஊரடங்கை மீறி திறந்து இருந்த மீன்-இறைச்சி கடைகளுக்கு அபராதம்

Published On 2022-01-23 09:45 GMT   |   Update On 2022-01-23 09:45 GMT
திருவள்ளூரில் இன்று காலை ஊரடங்கை மீறி திறந்து இருந்த மீன்-இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவள்ளூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே வருபவர்கள், வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்ட் வருண்குமார் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட மோதிலால் தெரு, மசூதி தெரு, மீன் மார்க்கெட், கற்குழாய் தெரு, கட்டபொம்மன் தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை மீன்- இறைச்சி, மளிகை கடைகள் ஊரடங்கை மீறி திறந்து இருந்தன. இதனால் அங்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். இதுபற்றி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவுப்படி நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுதர்சன் ஆகியோர் அப்பகுதிகளுக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர்.

வியாபாரத்தில் ஈடுபட்ட மீன், இறைச்சி கடை வியாபாரிகளை எச்சரித்து உடனடியாக கடைகள் மூட உத்தரவிட்டனர். மேலும் இறைச்சிக் கடைக்கு ரூ.8 ஆயிரமும், 10 மீன் கடைகளுக்கு 3 ஆயிரமும், 2 மளிகை கடைக்கு ரூ.1000 என அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News