மீன் பிடிக்க சென்றபோது பூண்டி ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கொழுந்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது30). மீனவர். நேற்று மாலைஅவர் மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ஏரிக்கு வந்து பார்த்தபோது படகு மட்டும் இருந்தது விஜயன் மாயமாகி இருந்தார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கர் உத்தரவின் பேரில், உதவி அலுவலர் வில்சன் ராஜ்குமார், நிலைய அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பூண்டி ஏரியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் விஜயனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரிக்குள் சேற்றில் சிக்கி இருந்த விஜயனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மீன்பிடித்த போது தவறி ஏரிக்குள் விஜயன் விழுந்தபோது அவர் சேற்றில் சிக்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.