உள்ளூர் செய்திகள்
அலகுமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் இல்லாமல் நடந்தது
நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.
திருப்பூர்:
திருப்பூர் பொங்கலூர் அடுத்த அலகுமலையில் பிரசித்தி பெற்ற முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி இக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது. நேற்றுமுன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹுதி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியன நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.
இன்று (23ம் தேதி) காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8:45 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு ஆகியன நடைபெற்றது. 9:30 மணிக்கு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி மூலாலயம் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், புதிய தேர் பவனி வருதல், தீபாராதனை, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ராஜா பட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் நடத்தி வைத்தனர். இன்று முழு ஊரடங்கு என்பதால் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.