உள்ளூர் செய்திகள்
திருவாரூர் ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் ரெயில் நிலையத்தில் திருச்சி ரெயில்வே கோட்ட துணை மேலாளர் ராமலிங்கம் திடீர் ஆய்வு செய்தார்.
ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் குறுங்காடு அமைக்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை சுகாதாரம் குறித்து உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள 75 ரெயில்வே கேட்களில் முன்னாள் ராணுவத்தினர்களை தற்காலிக ரெயில்வே கேட் கீப்பர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பணி நிறைவு அடைந்ததும் அனைத்து ரெயில் சேவைகளும் முழுமையாக தொடங்கப்படும். திருவாரூர் ரெயில் நிலையத்தில் 1-வது மற்றும் 4-வது நடைமேடைகளில் இரண்டு எஸ்கலேட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைகளை உயர்த்த வேண்டியுள்ளது.
நடைமேடை உயர்த்தப்பட்ட பின்னர் எஸ்கலேட்டர் பொருத்தப்படும்.
ரெயில்வே கேட் கீப்பர்கள் தேர்வு நிறைவடைந்த பின்னர் உடனடியாக பணி நியமனம் செய்து அதனைத் தொடர்ந்து அனைத்து வகை ரெயில் சேவை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் திருவாரூர் ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர்
பாஸ்கர் ,திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திருவாரூர் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர்
பல்வேறு கோரிக்கைகள் மனு அளித்தனர்.