சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி
பதிவு: ஜனவரி 23, 2022 06:18 IST
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று
முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் செயல்படும்.
காய்கறி-மளிகை, இறைச்சி கடைகள், டாஸ்மாக்’ கடைகள் வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவைகள் செயல்படாது. மாநகர பஸ், மெட்ரோ ரெயில் சேவையும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் மட்டும் இயங்கும். வெளியூரில் இருந்து தொலைத்தூர பஸ்கள், ரெயில்களில் வரும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் ஆட்டோ, வாடகைகார்கள் நிபந்தனைகளுடன் இயங்க போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் வழக்கமான ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இன்று முகூர்த்தநாள் என்பதால் சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக அழைப்பிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், வாகன சோதனையின் போது காண்பித்து செல்லலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கில் தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் சோதனை செய்யப்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 350 இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சென்னையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :