உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

காதலனுடன் சேர்ந்து வாழ முடியாததால் குழந்தையுடன் தற்கொலை செய்த சிறுமி

Published On 2022-01-22 09:43 GMT   |   Update On 2022-01-22 09:43 GMT
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய பொன்ராஜை கைது செய்தனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த கணியூர் காரத்தொழுவை சேர்ந்தவர் நிவேதா (வயது 16). இவர் 9-ம் வகுப்பு படித்துவந்தபோது அதே ஊரை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் பொன்ராஜ் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி பொன்ராஜ், நிவேதாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் நிவேதா கர்ப்பமானார். இதையறிந்த அவரது பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய பொன்ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதனிடையே மாணவிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிரதிக்ஷா என்று பெயர் வைத்தனர். அதன்பின்னர் மாணவியும், குழந்தையும் பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் மாணவியை பலாத்காரம் செய்த பொன்ராஜ் ஜாமீனில் வெளியே வந்து வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்று வந்தார். நிவேதாவுக்கும், குழந்தைக்கும் தேவையான உதவிகளையும் செய்து வந்தார். 

நேற்று மாலை நிவேதா தனது 7 மாத கைக்குழந்தையுடன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் 2 பேரும் உடல் கருகினர். உடனே அவர்களை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நிவேதாவும், அவருடைய குழந்தை பிரதிக்ஷாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவேதா கைக்குழந்தையுடன் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் நிவேதா கர்ப்பமானதும் அவரது காதலன் பொன்ராஜ் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அவர் மிகவும் மனமுடைந்தார்.

இந்தநிலையில் குழந்தை பிறந்த பிறகு பொதுமக்கள் சிலர் நிவேதாவை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனிடையே கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பொன்ராஜ் நிவேதாவுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். 

குழந்தைக்கு தேவையான பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார். ஆனால் வழக்கு நடைபெற்று வந்ததால் இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இதுவும் நிவேதாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. 

இதன் காரணமாக வாழ பிடிக்காமல் நிவேதா தனது கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 மாத கைக்குழந்தையுடன் சிறுமி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News